Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனது நாட்டு மக்களுக்கான உரையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்!

ஏப்ரல் 09, 2020 07:18

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்து, பிரேசில் மக்களுக்கு சரியான நேரத்தில் உதவி செய்ததற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயனளிப்பதாக நம்பப்படுகிறது. உலகளவில் விநியோகிக்கப்படும் இம்மருந்தில், 70 சதவீதத்தை (20 கோடி மாத்திரைகள்) இந்தியா தான் உற்பத்தி செய்கிறது. உள்நாட்டு இருப்பு போதுமானதாக கருதப்படும் வரை ஏற்றுமதியை தடை செய்வதாக மார்ச் இறுதியில் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றி வளைத்துள்ளதால், இதற்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே உலக நாடுகளின் தலைவர்கள் வரிசையாக, மோடியை தொடர்பு கொண்டு மருந்தை ஏற்றுமதி செய்ய வேண்டுகோள் வைக்கின்றனர்.

'ராமாயணத்தில், அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து லட்சுமணன் உயிரை காப்பாற்றியது போல, இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும்.' என பிரதமர் மோடிக்கு உணர்ச்சிப்பூர்வமாக கடிதம் எழுதியிருந்தார் அந்நாட்டு அதிபர் போல்சனாரோ. அவரது வேண்டுகோளை ஏற்று, மருந்துக்கான மூலப்பொருட்களை அனுப்ப மோடி அனுமதி தந்தார்.

இந்நிலையில், பிரேசில் நாட்டு மக்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றிய அதிபர் போல்சனாரோ, “நல்ல செய்தி ஒன்று இருக்கிறது. இந்தியப் பிரதமருடனான எனது நேரடி உரையாடலின் விளைவாக, ஹைட்ராக்சி குளோரோகுயின் உற்பத்தியைத் தொடர, மூலப்பொருட்களைப் பெற உள்ளோம். இதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். சரியான நேரத்தில் உதவிய பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.' என்றார்.

முன்னதாக, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக 'இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி… இதனை மறக்க மாட்டோம்.' என டிரம்ப் நெகிழ்ச்சிப்பட கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்